வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்றுச் சின்னங்கள் புதைந்து போய் உள்ளன. இந்த நிலையில் வேலூர் குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் கிராமத்தில் மூன்று நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், மூன்று நடுகற்களும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டு நடுகற்களை அந்தப் பகுதி மக்கள் கடவுள்களாக வழிபட்டு வருகின்றனர். மற்றொரு நடுகல் ஆனது புதரிலிருந்து உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று நடு கற்களிலும் கணவன் மனைவி போன்ற உருவங்கள் உள்ளன. கடவுள்களாக வழிபட்டு வரும் இரண்டு நடுகற்களில் ஒன்றில் நடுவில் ஒரு ஆணும் இரு இரு பக்கங்களில் பெண் உள்ளவாறு உள்ளது. அதில் ஒரு பெண் கையில் மது குடுவை போன்ற ஒன்று வைத்துள்ளார்.
அதாவது இரண்டு மனைவி, கணவன் இறந்த பிறகு ஒரு மனைவி உடன்கட்டை ஏறி உயிர் இறந்திருக்கலாம். இன்னொரு மனைவி இறக்க தைரியம் இல்லாததால் மது குடித்துவிட்டு உடன்கட்டை ஏறி இருக்கலாமெனத் தோன்றுகிறது.
மேலும் இரண்டு நடுகற்களில் உள்ள ஆண் மன்னராக அல்லது போர் வீரராக இருந்து உயிர் இழந்தபோது, அவர்களது மனைவியும் உடன் கட்டை ஏறி உயிரைத் துறந்து இருப்பதை நினைவு கூறும் வகையில் இந்த நடுகல் செதுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறினார்.
சிதிலமடைந்த நடுகற்களை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் எனத் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.